
அ.தி.மு.க அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் உடல்நலக்குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரைக்காணச் சென்ற எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருக்கும் நேரத்திலேயே சசிகலாவும் சென்றது பரபரப்பானது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில், தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட முடியாமல் இருக்கும் மதுசூதனனுக்குப் பதிலாக வேறு ஒருவரை அவைத்தலைவராக நியமிக்கலாம் என்ற பேச்சு அ.தி.மு.க-வில் எழுந்துவிட்டது. இதுகுறித்தப் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள்? என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்.

“அவைத்தலைவரை மாற்ற வேண்டிய கட்டாயமெல்லாம் இப்போது எழவேயில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், நன்றாக இருந்தாலும் அவைத்தலைவருக்கான பணிகள் அவ்வளவாக இல்லை. நிர்வாகிகள் கூட்டம், ஆட்சிமன்றக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவை ஜெயலலிதா இருந்த காலத்தில் அவைத்தலைவர் தலைமையில்தான் நடக்கும். ஆனால், இப்போதோ அப்படியில்லை. ஒருங்கிணைப்பாளர் இல்லாமலேயே கூட்டம் நடக்கிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்குத்தான் அவைத்தலைவர் வருவது கட்டாயம்.
எனினும், அவைத்தலைவரை மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஏனெனில், ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருடன் சென்றார் மதுசூதனன். தற்போதும் பன்னீரின் அரவணைப்பிலேயே இருக்கிறார். பன்னீரே சசிகலா ஆதரவு மனநிலையில் இருக்கிறாரோ என்ற அச்சம் எடப்பாடிக்கு உண்டு. அப்படி இருக்கும்பட்சத்தில் பன்னீர்செல்வம் எந்த முடிவெடுத்தாலும், அதற்கு மதுசூதனனும் கண்டிப்பாக கட்டுப்படுவார். அவைத்தலைவர் கருத்துகளை கட்சித் தலைமை மதிக்க வேண்டுமென்பது மரபு. அதனால் என்றிருந்தாலும் மதுசூதனன் ஆபத்து என்பதால்தான், தற்போதே அவைத்தலைவரை மாற்றியாக வேண்டும், அதிலும் தனக்குத் தோதானவர்களை நியமிக்க வேண்டுமென்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.
ஆனால், இதற்கு பன்னீர் இசைந்துகொடுக்கவில்லையாம். ஏனென்றால், தி.மு.க-வில் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் இதேபோன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது, பொதுச்செயலாளர் பதவியை வேறொருவருக்குக் கொடுக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், க.அன்பழகனின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், இறுதி வரை அவரே பொதுச்செயலாளராக தொடருவார், தேர்தல் சமயத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழலில், அவரது அதிகாரம் மட்டும் தற்காலிகமாக தலைவருக்கு மாற்றப்படும் என கட்சி விதிகளில் திருத்தம் செய்து, அதிகாரத்தை எடுத்துக்கொண்டார் ஸ்டாலின். பின்னர் க.அன்பழகன் மறைந்து, துரைமுருகன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் அதிகாரங்கள் மீண்டும் பொதுச்செயலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதே ஃபார்முலாவில் வேண்டுமானால் நாமும் செல்லலாம் என்கிறார் பன்னீர்செல்வம். மதுசூதனன் மறைந்த பின்னர் வேறொருவரை நியமித்துக்கொள்ளலாம், அதுவரை அவரே தொடரட்டும் என்பதுதான் பன்னீரின் கருத்து” என்றார்.

சரி அவைத்தலைவர் பதவியை விரும்பும் பட்டியலில் யார் இருக்கிறார்கள்? என்று நாம் கேட்க, மீண்டும் பேசத்தொடங்கினார். “பொன்னையன், பா.வளர்மதி, செங்கோட்டையன், தனபால், ஜெ.சி.டி.பிரபாகர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பெயர்களைச் சொல்கிறார்கள். இவர்களில் பொன்னையனுக்கும் வயதாகிவிட்டதால் சாத்தியப்படாது. வளர்மதி ஆக்ரோஷமாக செயல்படுபவர் மேலும், பெண்களை இதுவரை அவைத்தலைவர் பதவிக்கு நியமித்ததில்லை என்பதால் அவருக்கும் வாய்ப்பு குறைவு தான். செங்கோட்டையனை நியமிக்கலாம், ஆனால், ஏற்கனவே கட்சியில் கவுண்டர் ஆதிக்கம் என்ற பேச்சு இருப்பதால் அதற்கும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.
வன்னியர் இடஒதுக்கீடு கொடுத்ததால் அச்சமூகம்தான் அதிகளவில் அதிமுகவுக்கு வாக்களித்தது. அதனால் கே.பி.அன்பழகனுக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம், வன்னியர் இடஒதுக்கீட்டால் எஸ்.சி வாக்குகள் கிடைக்கவில்லை. அதை சரிகட்ட முன்னாள் சபாநாயகரும், அருந்ததியர் சமூகத்தவருமான தனபாலுக்குக் கிடைக்கலாம். சிறுபான்மை + வன்னியர் கேட்டகரியில் ஜெ.சி.டி.பிரபாகர் வருவதால் அவருக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இவர் பன்னீரின் ஆதரவாளர் என்பதால் எடப்பாடி தரப்பு விரும்பாது. இவர்கள் தவிர ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி பெயர்களும் அடிபடுகிறது. இவ்விவகாரத்திலும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையே முட்டல் மோதல் நடக்கிறது!” என்பதோடு முடித்துக்கொண்டார்.