
சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த அதே கோவை மண்ணில் இருந்து அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார் கமல்.
“தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம் என வருத்தப்படாதீர்கள். வெற்றி பெற்றிருந்தால் கூட நமக்கு இவ்வளவு மக்கள் ஆதரவு இருப்பது தெரிந்திருக்காது. பிரதான கட்சிகள் கோடிகளை இறக்கியபோதும், நாம் நேர்மையை மட்டும் முன்னிறுத்தி வெற்றியை நெருங்கியிருக்கிறோம். நான் தோல்வியடைந்ததும் எத்தனையோ பேர் வருத்தப்பட்டனர். என் வாழ்க்கையில் திரைப்படங்கள் தொடங்கி பல விஷயங்களில் தோல்விகள் தான் நிறைய பாடங்களை கற்று கொடுத்துள்ளன.

கமல்ஹாசன்
அப்படித்தான் இந்தத் தேர்தலும். இப்போது துரோகிகளும் நம்மை விட்டு விலகிவிட்டனர். உருமாறிய கொரோனா போல, உருமாறிய மக்கள் நீதி மய்யமாக நிற்கிறோம். இனி படிப்படியாக நல்லது நடக்கும்”
கோவையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் உதிர்த்த வார்த்தைகள் இவை.
கோவை தெற்கு தொகுதியில் 19 சுற்றுகளில் முன்னிலை வகித்தாலும், நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அதன்பிறகு துணைத்தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ம.நீ.ம-வுக்கு குட்பை கூறி நடையை கட்டினர்
“அவ்வளவுதான். இனி கமல் சினிமாவுக்கு போய்விடுவார்” என்று கருத்துகள் பரவலாக பரவியது. ஆனால், தோல்வியடைந்த அதே கோவை மண்ணில் இருந்து அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது மக்கள் நீதி மய்யம்.
தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் கமல் கோவை வந்திருந்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

ஆனாலும், மூன்று நாள்கள் கோவையிலேயே தங்கி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தியிருக்கிறார் கமல்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் பேசினோம். “உண்மையில் தேர்தல் தோல்வி எங்களை கடுமையாக பாதித்தது. தலைவரின் நம்பிக்கை நிறைந்த பேச்சு இப்போது உந்துதலை கொடுத்திருக்கிறது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த ஆரம்பத்திலேயே பல முயற்சிகள் நடந்தன.

ஆனால், அப்போது முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் அதற்கு முட்டுக்கடையாக இருந்தனர். இப்போது கட்டமைப்பில்தான் கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து வருகிறோம். ஒவ்வொரு பூத்துக்கும் குறைந்தது 3 பேரை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.
இதுதவிர 12,000 போஸ்டிங் முடிவு செய்யப்பட்டு பெண்டிங்கள் இருக்கிறது. அதை எல்லாம் நிரப்பப் போகிறோம். முன்பு இருந்தவர்களை கடந்து, கட்சியில் உள்ள நிலவரம், பிரச்னைகளை தலைவர் காதுக்கு எடுத்து செல்வதில் பிரச்னை இருந்தது. அவர்களை தாண்டி தலைவரை நெருங்கவே முடியாது. இப்போது பலர் விலகிவிட்டனர். சிலர் ஒதுங்கிவிட்டனர்.

ஆன்லைன் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பது, பொறுப்புகளை நியமிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நிர்வாகிகளுக்கு ஸ்டார் அடிப்படையில் ரேட்டிங் வைத்து காண்காணிக்க போகிறோம். சிறப்பாக பணி செய்பவர்களுககு அடுத்தகட்ட பெரிய பொறுப்புகள், சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளோம்.
அதில் ஒரு பிரிவாக சிறப்பாக பணியாற்றுபவர் தலைவருடன் ஒரு டின்னர், தேநீர் விருந்து போல ஏற்பாடு செய்து உற்சாகப்படுத்த உள்ளோம். கமலின் அணுகுமுறையிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. முன்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் கமலுக்கு பெரிதாக உடன்பாடு இருக்காது. அதனால், மக்களுக்கு வேறுவிதங்களில் பிரச்னை வந்துவிடக்கூடாது என்று சொல்வார். ஆனால், போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை உணர்ந்துவிட்டார்.

அதனால் சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தோம். ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்துள்ளோம். கோவையில் கமலே நேரடியாக மனு அளித்திருக்கிறார்.
எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக ரியாக்ட் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் வேண்டும் என்று கமல் கூறியுள்ளார். இதேபோல பல விஷயங்களை முன்மொழிவார். போராட்டங்களும் தொடரும். பி.ஜே.பி-யின் பி டீம் என்ற அடையாளத்தை உடைக்கவும் தயராகி வருகிறார். கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,

பி.ஜே.பி-க்கு எதிராக மம்தா உருவாக்கி வரும் அணியில் இணைந்து செயல்பட தயராக உள்ளேன் என்ற கமல், மேக்கேதாட்டு, கொங்குநாடு விஷயங்களில் பி.ஜே.பி-யை கடுமையாக சாடியிருந்தார். அதேபோல ஆர்.டி.ஐ மூலமாகவும், உள்ளூர் பிரச்னைகளை தோண்டி துருவி போராட திட்டமிட்டுள்ளோம்.
நிர்வாகிகள், தொண்டர்கள் கமல்ஹாசனை நெருங்க முடியவில்லை என்பதை பலரும் குறையாகவே கூறிவந்தனர். ஆனால், இந்தமுறை கோவைக்கு வந்தபோது கமல் பல நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். கமலே நேரடியாக மாவட்ட செயலாளர்களிடம் பேசுகிறார். கமலை சந்திக்க அப்பாய்மென்ட் தொடர்பாக, அவரது நேரடி கண்காணிப்பில் ஒரு மெயில் ஐ.டி உள்ளது.

அதிலேயே நாம் தகவல்களை கொடுத்தால் உடனடியாக அடுத்தகட்ட நடைமுறைகளுக்கு சென்றுவிடும். கூட்டணி விஷயத்திலும் நிர்வாகிகளின் குரல்களை பொறுமையாக கேட்கிறார். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு, கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வோம்” என்றனர்.
கமல் தேர்தலில் போட்டியிட்டபோது இருந்த உற்சாகத்தைவிட, கமலின் இந்த வருகை ம.நீ.ம வட்டாரங்களில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. கோவை சிட்டி முழுவதும் கமல் போஸ்டர்களே தென்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் ம.நீ.ம கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியீடு, 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தொடக்கம், தேர்தலில் போட்டியிட்டது என்று கமலுக்கு கோவை சென்டிமென்ட் அதிகம்.

இந்தமுறையும் கோவை கலெக்டர் காலணி அணிவித்த மாற்றுத்திறனாளி சிறுவன் குடும்பத்துக்கு தள்ளுவண்டி வழங்கியது, தொழில் அமைப்பினர், முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடிது என கோவை மீதும் தனி அக்கறையோடு இருக்கிறார். கோவையில் ம.நீ.ம-வுக்கு பெரிய அஸ்திவாரம் தோண்டப்பட்டிருப்பதால், கமல் அடுத்தத் தேர்தலிலும் கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கின்றனர் மய்யத்தினர்.
ஆனால், இப்போதும் கூட கமலை நெருங்குவதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக ம.நீ.ம தொண்டர்கள் வருந்துகின்றனர். “முன்பு இருந்த நிலை இப்போது இல்லைதான். ஆனால், அப்போது ஏழு கட்டம் தாண்டி செல்ல வேண்டும் என்றால், இப்போது மூன்று கட்டங்களை தாண்டி செல்ல வேண்டியதாக இருக்கிறது. தலைவர் ஆர்வமாக நேர்மையாக இருக்கிறார். இடையில் உள்ள சிலர் அப்படி இல்லை. அவர்கள் தலைவரை நெருங்க விடுவதில்லை. அவர்கள் மூலம் நிர்வாகிகள் நியமனங்களிலும் தவறு நடக்க வாய்ப்புள்ளது. பலர் அரசுப்பணி, ஐ.டி பணியில் இருந்து கொண்டே கமல் மீதுள்ள நம்பிக்கையில் இப்போதுவரை அவருடன் பயணிக்கிறோம். இதன்பிறகு தலைவர் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படக் கூடாது. அவர் ஒவ்வொரு கிராமங்களுக்கும் வரவேண்டும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு வாங்கித்தர துணை நிற்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் என்று பல அடிப்படை தேவைகளுக்கே போராடிக் கொண்டிருக்கின்றனர். சரியான நிர்வாகிகளை நியமித்து அந்தப் பிரச்னைகளை அணுகி, தலைவரும் மக்களை சந்தித்து பேசினால்தான், இந்தத் தேர்தலில் ஏற்பட்ட சங்கடம் அடுத்த தேர்தலில் இருக்காது” என்கின்றனர்.