
புதுடில்லி: எல்லையில் நிலம், நீர், ஆகாயம் என அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அதனை சமாளிக்க முப்படைகளும் தயாராக உள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. இந்திய ராணுவத்தின் தைரியம், வீரம் மற்றும் கட்டுப்பாடு ஒப்பிட முடியாதது. வருங்கால சந்ததியினர்கள் நமது வீரர்களை நினைத்து பெருமைப்படுவார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல தேச விரோத சக்திகள் எல்லைகளில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்க முயற்சித்து வருகின்றன. பாகிஸ்தான் எல்லைகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன். பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்ததன் மூலம் பிரிவினைவாத சக்திகள் வலிமை குறைந்துவிட்டது.

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சில புதிய அச்சுறுத்தல்கள் தோன்றியுள்ளன. ஜம்மு விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய சவால்களுக்காக தேசிய பாதுகாப்பு அமைப்பை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் சம்பவங்களால் நம் நாட்டின் பாதுகாப்பில் கேள்வி எழுகிறது. அங்குள்ள சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
எல்லையில் நிலம், நீர், ஆகாயம் என எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அதனை சமாளிக்க முப்படைகளும் தயாராக உள்ளது. இதற்காக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு எந்த சூழ்நிலையிலும் தேசிய பாதுகாப்பு, தேசிய சுயமரியாதை மற்றும் தேசத்தின் உயர்வு தொடர்பான பிரச்னைகளில் சமரசம் செய்யாது என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833670