
மதுரையில் கருணாநிதி பெயரில் கட்டப்படும் நூலகத்திற்கான இடத்தில் பென்னிகுவிக் வசித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும், ஆதாரம் இருந்தால் நிச்சயமாக அதை மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தாங்கள் தயாராக இருப்பதாக செல்லூர் ராஜூக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
சென்னை,
சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
பென்னிக்குவிக்
செல்லூர் ராஜூ (அ.தி. மு.க.):- மதுரையில் பென்னிகுவிக் வாழ்ந்த கட்டிடத்தை இடித்து விட்டு கருணாநிதி பெயரில் நூலகம் கட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே அந்த இடத்தை இடிக்காமல் வேறு பகுதியில் கருணாநிதி பெயரில் நூலகம் கட்ட வேண்டும்.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்:- உறுப்பினர் தவறான தகவல்களை கூறக்கூடாது. நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுவிக் வாழ்ந்ததாக கூறுவது தவறான கருத்து. 1911-ம் ஆண்டு பென்னிகுவிக் மரணம் அடைந்து விட்டார். அந்த நினைவு இல்லம் 1912-ம் ஆண்டு முதல் 1915-ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டது. அவர் இறந்த பிறகு கட்டப்பட்ட கட்டிடத்தில் அவர் எப்படி வாழ்ந்திருக்க முடியும்?.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- உறுப்பினர் செல்லூர் ராஜூ, பென்னிகுவிக் நினைவிடத்தை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கருணாநிதி பெயரால் நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இது சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்பட்டிருக்கிறது, அப்போதும் பொதுப்பணித் துறை அமைச்சர் மூலமாக விளக்கம் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்போதும் சொல்கிறேன், நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அது சட்டமன்றத்திலும் பதிவாக கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தை நான் சொல்லியிருக்கிறேன்.
பெருந்தன்மையை குறைக்கும்
செல்லூர் ராஜூ: (அ.தி. மு.க.):- எல்லோரும் அப்படி தான் சொல்கிறார்கள். அதை தான்…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- இப்படி சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாக சொல்லியிருக்கின்றீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையை குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.