
சென்னை : ‘விளை நிலங்களின் ஊடே, எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து, நெடுஞ்சாலைகள் ஓரமாக பதிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், விவசாய நிலங்களின் ஊடே, 310 கிலோ மீட்டர் துாரத்திற்கு, எரிவாயு எடுத்து செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள, ‘கெய்ல்’ நிறுவனம் திட்டமிட்டது. அதற்கான நடவடிக்கைகளையும் துவக்கியது. இது தொடர்பாக, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் 2013 மார்ச்சில் நடத்தப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த, ஜெ., அரசு, ‘கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாய்களை, நெடுஞ்சாலை ஓரமாக பதிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு கெய்ல் நிறுவனத்திற்கு ஆதரவாக அமைந்தது. அதன்பின், விவசாயிகள் போராட்டத்தால், திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.சமீபத்தில், ஓசூர் வழியே உத்தனப்பள்ளி வரை, விவசாயிகளின் நிலங்கள் ஊடே, எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை, கெய்ல் நிறுவனம் மீண்டும் துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த திட்டம், புதிதாக அமைக்கப்பட உள்ள, தர்மபுரி – ஓசூர் நான்கு வழிச்சாலையில், சாலையோரம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

எனவே, விளைநிலங்கள் ஊடே, எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில், தொழிற்சாலைகளின் ஓரமாக பதிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804361