
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
ஆடிப்பூரத்தை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் இன்றி ஆடிப்பூர நிறைவு விழா நடந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோவிலில் மீண்டும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் 16-ந் தேதி மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.