
சென்னை: அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் கோவில் கட்டும் கமிட்டியின் பொதுச்செயலரும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவருமான சம்பத்ராய், இன்று (ஆக.,23) காலை சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் இல்லத்திற்கு வந்தார்.

அங்கு பக்தர்கள் பேரவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மரத்தினால் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை சம்பக்ராய், நினைவு பரிசாக வழங்கினார். அப்போது பக்தர்களிடம் சம்பத்ராய் பேசியதாவது:
அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில், ராமர்கோவில் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. உலகளாவிய இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வரும் 2023ம் ஆண்டு டிச., மாதம் ராமர்கோவில் கட்டுமானப்பணிகள் முடிந்து விடும். செங்கல், கம்பி இல்லாமல் கோவில் கட்டப்படுகிறது. செயற்கை பாறையில் துாண்கள் அமைத்து, 3 அடுக்குகளைக் கொண்டிருக்கும்.
வரும் 400 ஆண்டுகள் நிலைத்து நிற்கத்தக்க அளவில் சிறப்பு சிமெண்ட் பயன்படுத்தப்படும். கோவில் திறப்பு விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் தென் மாநில அமைப்பு செயலர் பி.எம்.நாகராஜன், வட மாநில அமைப்பு செயலர் ராமன், தமிழக அமைப்பு செயலர் வழக்கறிஞர் சீனிவாசன். முன்னாள் டி.ஜி.பி., பாலசந்தர், ஆண்டாள் பேரவை பொருளாளர் சரவணன், பேரவை துணைத் தலைவர்கள் கணேசன், நாகராஜன், சக்திவேல், பிச்சுமணி, திருகோவிந்தன், சாய்சிவா, துரைசாமி, அன்பு, நாராயணன், தில்லை வெங்கட்ராமன், சண்முகம் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
பக்தர்கள் அனைவருக்கும் கேரளா புகழ் பலாப்பழம் பாயாயசத்துடன் பல்வேறு பதார்த்தங்களுடன் கொண்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2829118