
தஞ்சாவூர் கலெக்டர் உடனடியாக இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.சைபர் க்ரைம் போலீஸ் டீமும் தீவிர ஆக்ஷனில் இரங்கி விசாரணை மேற்கொண்டதில் கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூரில் கலெக்டர் நேர்முக உதவியாளர் என கூறி டாக்டர்கள், விஐபிக்கள்,தொழில் அதிபர்களிடம் போனில் பேசி `அரசு திட்டப்பணிக்கு பணம் தேவைப்படுது உங்களால முடிஞ்ச உதவிய செய்யுங்கனு’ கேட்டு அக்கவுண்ட் நம்பரை அனுப்பி பணம் கேட்டு மோசடி செய்ய முயன்ற கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். இதற்கு முன் அந்த தம்பதி பல மாவட்டங்களில் கலெக்டர் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூரில் கடந்த வாரம் பிரபல மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் பலருக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், `நான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் நேர்முக உதவியாளர் பேசுறேன். கொரோனா தடுப்பு பணி மற்றும் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் தேவைப்படுது. நீங்கள் ரூ 50,000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்” என அதிகாரி போலவே பேசி, `பேங்க் அக்கவுண்ட் நம்பர் மற்றும் டீடெய்ல் அனுப்பி வைக்கிறேன். பணத்தை அக்கவுண்ட்ல போடுங்க’ என கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.
கலெக்டர் பணம் கேட்க சொல்லி அவர் உதவியாளரே பேசுறாரேனேனு சிலர் பணம் செலுத்த முடிவு செய்தனர். இருந்தாலும் மற்ற சிலருக்கு ஏதோ பொறி தட்டி சந்தேகம் எழ, கலெக்டரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதை கேட்டு அதிர்ந்த கலெக்டர், `நான் யாரிடமும் பணம் கேட்க சொல்லலை. என் பேரை தவறாக பயன்படுத்தி யாரோ பணம் பறிக்க முயற்சிக்குறாங்க. நீங்க பணத்தை அக்கவுண்ட்ல அனுப்பி ஏமாந்திறாதீங்கனு’ சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து உடனடியாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். பின்னர் சைபர் க்ரைம் போலீஸார் இது குறித்து துரித விசாரணையில் இறங்கியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட தம்பதியான கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், `போனில் பேசியவர் சொன்ன அக்கவுண்ட் நம்பரை ஆய்வு செய்ததில், அந்த நம்பர் கோயம்புத்துார் மாவட்டம் ஓண்டிப்புதுார் பகுதியைச் சேர்ந்த ரெஜினா(40) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. உடனடியாக குறிப்பிட்ட வங்கி கணக்கை முடக்கி விட்டு விசாரணைக்காக கோயம்புத்துார் சென்றோம். அங்கு ரெஜினா குறித்து விசாரித்தோம். அங்கு அவர் பியூட்டி பார்லர் நடத்தி வருவது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்ததில் ரெஜினாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆசைக்காட்டி அவரது வங்கி கணக்கை வாங்கி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தானபாரதி (65) அவரது மனைவி ரீட்டா பபியா (50) தம்பதி மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த தம்பதியை கண்காணித்ததில் அவை உண்மையென தெரிய வந்தது. பின்னர் ரீட்டா பபியா அதன் பிறகு தலைமறைவாக இருந்த சந்தான பாரதி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல கலெக்டரிகளின் பெயரை சொல்லி அவர்கள் ஏமாற்றிவந்த அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. ரீட்டா பபியா, சந்தானபாரதியை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டவர். இருவரும் சொகுசாக வாழ ஆசைப்பட்டு பல்வேறு மோசடி செயலை செய்யத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் திருட்டு வழக்கு, திருப்பூரில் மோசடி வழக்கு என தொடர்ந்து கைவரிசை காட்டி வந்ததில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பின்னர்தான் கலெக்டர் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டால் எல்லோரும் நம்புவாங்க ஈஸியா பணம் கிடைக்கும் எந்த ரிஸ்கும் இருக்காது என திட்டமிட்டு அதனை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டரின் உதவியாளர் பேசுவதாக கூறி முதலில் சந்தானபாரதி போனில் பேசுவார். பின்னர் தன் மனைவி ரீட்டா பபியாவின் அக்கவுண்ட் நம்பரை அனுப்பி வைப்பார். கலெக்டர் உதவி கேட்பதாக நினைத்து கொண்டு பலரும் ரூ 50,000 வரை பணம் செலுத்தியுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராதபடி நேர்த்தியாக பேசுவதில் கில்லாடியாக வலம் வந்துள்ளார் சந்தானபாரதி. ஆனால் இவை கலெக்டர் பெயரில் செய்யப்பட்ட மோசடி என்பது தெரிய வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தங்கள் அக்கவுண்ட் நம்பரை கொடுத்திருந்ததால் சிக்கி கொண்டனர். சிறையில் வெளிவந்த பின்னர் தான் அவர்கள் புது டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கினர். தங்களது அக்கவுண்ட் நம்பரை கொடுத்தால் சிக்கி கொள்கிறோம் வேறு யார் நம்பரையாவது அனுப்பினால் மாட்டிகொள்ள மாட்டோம் என திட்டமிட்டனர்.
முதலில் இதற்காக பேசுவதற்கு தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுடைய ஆதாரை பயன்படுத்தி, அவர்களது பெயர்களில் சிம் கார்டு வாங்கி பேசி வந்துள்ளனர். அதிலும் சிக்கல் வந்துள்ளது. பின்னர் அதற்கு பகடைகாயாக பியூட்டி பார்லர் நடத்தும் பெண்கள், மதுபழக்கத்திற்கு ஆளான ஆண்கள் ஆகியோரை குறி வைத்து செயல்பட்டுள்ளனர்.
எந்த மாவட்டத்துல மோசடி செய்வது என்பதை முடிவு செய்து கொண்டு அந்த மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இந்த தம்பதி தங்குவார்கள். அப்பகுதியில் பியூட்டி பார்லர்கள் நடத்தும் பெண்களிடம், “சினிமா சூட்டிங் நடக்க இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம், கிட்டதட்ட 100 ஆர்டிஸ்ட் நடிக்கப்போறாங்க. நீங்க மேக்கப் போட வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் ஆகும்?” என கேட்டு ஆசையை தூண்டுவார் சந்தானபாரதி மனைவி. சினிமா ஷூட்டிங்கிற்கு மேக்கப் போடுற ஆசையில் அவங்களும் வேற விவரம் எதுவும் கேட்காம ஒத்துகுவாங்க. அட்வான்ஸ் பணம் தயாரிப்பு தரப்பு மேனேஜர் மூலமா அக்கவுண்ட்ல போட சொல்றேன். அங்க நம்பர் கொடுங்கனு வாங்கி தன் கணவர் சந்தானபாரதியிடம் கொடுத்து விடுவார்.
சந்தானபாரதி, தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள சிலரை நோட்டமிடுவார். அவர்கள் மது குடிக்குற ஆளா இருந்தால், தன் செலவில் தினமும் மது வாங்கி கொடுத்து நன்கு பழகி கொள்வார். பின்னர் தனக்கு யாரும் இல்லை என கூறி அவர் ஆதாரை பெற்று சிம்கார்டு வாங்கி அந்த நம்பரிலேயே கலெக்டர் உதவியாளர் பேசுறேனு பேசுவார். போன் பேசுவதற்கு வேறு ஒருவர் பெயரில் சிம், பணம் பெறுவதற்கு வேறு ஒரு நபரின் அக்கவுண்ட் நம்பர் என சதித்திட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தாங்கள் பேசுபவர்கள் பணம் செலுத்தி விட்டால், உடனே அந்த பியூட்டி பார்லர் பெண்ணை சந்தித்து, `வேறு ஒரு நம்பருக்கு போட வேண்டியதுக்கு பதிலா உங்க அக்கவுண்ட்ல பணத்த போட்டுட்டாங்க.. உங்களுக்கு லேட்டா அட்வான்ஸ் போடுறதா சொன்னாங்க’ என்று திருப்பி வாங்கிடுவாங்க. அல்லது குறிப்பிட்ட பணத்தை அட்வான்ஸா வச்சுகுங்க, பாக்கி பணத்தை எடுத்து கொடுங்கனு பல காரணங்களை கூறி அவங்க அக்கவுண்ட் நம்பருக்கு வந்த பணத்தை தம்பதிகள் வாங்கிடுவாங்க.
இதனால் யாருக்கும் சந்தேகமும் வரல. போலீஸில் சிக்கி கொள்ளவும் இல்லை. கடந்த 2017-ம் ஆண்டு வேலுார், நீலகிரி, 2019-ம் ஆண்டு கரூர் உள்ளிட்ட கலெக்டர்கள் பெயரை பயன்படுத்தி பணம் பறித்துள்ளனர். இதே போல் தஞ்சாவூர் கலெக்டர் பெயரை பயன்படுத்தி மோசடி செயலில் இறங்கியுள்ளனர். பணம் கேட்டவர்கள் சுதாரித்து கொண்டு கலெக்டரின் கவனத்துக்கு இதனை கொண்டு சென்றனர்.

அவர் உடனடியாக இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சைபர் க்ரைம் போலீஸ் டீமும் தீவிர ஆக்ஷனில் இறங்கி விசாரணை மேற்கொண்டதில் கலெக்டர் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்ட கணவன் மனைவி பற்றி தெரியவந்ததுடன் அவர்களும் சிக்கி கொண்டனர். முதலில் ரீட்டா பபியாவை கைது செய்து திருச்சியில் பெண்கள் சிறையில் அடைத்தோம். பின்னர் தலைமறைவாக இருந்த அவரது கணவர் சந்தானபாரதியை கைது செய்தோம். மேலும் அவர்களுடன் விசாரணை தொடர்ந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்களின் நம்பர் எப்படி கிடைக்கிறது என்பது குறித்தெல்லாம் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.
Source: https://www.vikatan.com/news/crime/married-couple-arrested-for-cheating-in-the-name-of-collector