
உலகப்பொதுமறையாகத் திகழும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
“தமிழின் தொன்மைக்கு இலக்கியச் சான்று, வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. அதை அறிவியல் பூர்வமாக நிறுவ தமிழ்நாடு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர். அதனால் சிலருக்கு வயிறு எரிவதைப் பற்றி கவலை இல்லை” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், “தமிழ் பண்பாட்டுக்காக நாம் முன்னெடுத்துள்ள முயற்சியை யார் கொச்சைப்படுத்தினாலும் கண்டிக்கத்தக்கது.
தமிழ் வளர்ச்சி, பெருமை, தொன்மை என தமிழருக்கு தனி சிறப்பு உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் தொன்மை, வரலாற்றை உறுதிப்படுத்த அறிவியல்பூர்வமாக தரவுகள் கிடைத்து வருகிறது.

அகழாய்வுகள் தேவையற்றது என தேவையற்ற சிலர் கூறுவதை கண்டுகொள்ள வேண்டாம். தமிழின் பெருமை, தமிழரின் தொன்மை உலக அளவில் பெருமை அடைவதில் சிலருக்கு வயிறு எரிகிறது. அந்த வயிறு நன்றாக எரியட்டும். அவர்களை பற்றி கவலையில்லை. தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வோம்.
தமிழின் பெருமையை தமிழரின் நாகரீகத்தின் தொன்மையின் சான்றுகளை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து நிரூபிப்போம். தமிழரின் நாகரிகம் பண்பாடு அகிலம் பரவட்டும், உணர்வு பொங்கட்டும்.

தமிழ் பண்பாட்டு சூழலில் நாம் முன்னெடுத்துள்ள முயற்சியை யார் கொச்சைப் படுத்தினாலும் அது கண்டிக்கத்தக்கது.
சிந்து சமவெளி நாகரிகத்துடன் வைகை சமவெளிக்கும் இருக்கும் தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொன்மை அடையாளங்கள் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளது.
சிவகளை ஆய்வுகள் நம்மை இரும்பு பயன்பாட்டின் தொடக்க காலத்திற்கு அழைத்து செல்கிறது.
நாகரிகம் மிகுந்த சமூகமாக பல நாடுகளுக்கு வணிகம் செய்த சமூகமாக நாம் இருந்திருக்கிறோம். இத்தனை சான்றுகள் கிடைத்தும் அதை ஏற்றுக்கொள்ள சிலருக்கு மனம் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து இந்த அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வோம். தமிழரின் பெருமையை அறிவியல் பூர்வமாக பண்பாட்டு தளத்தில் நிறுவுவோம்.
அறிஞர் அண்ணா சொன்னதுபோல் இந்த பண்பாட்டுத் தீ, தமிழ் நாகரிக பண்பாட்டுத் தீ, அகிலமெல்லாம் பரவட்டும். தீ பரவட்டும்….இது போன்ற வயிற்றெரிச்சல் உள்ளவர்களை உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் எதிர்ப்பான்” என்றவர்,
“உலகப்பொதுமறையாகத் திகழும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
உலகெங்கும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்கி, அதன் மூலம் கடல் கடந்த நாடுகளில் ஆய்வுகள் நடைபெறுவதற்கும், தமிழரின் பெருமையை அவர்கால் தெரிந்து கொள்ளும் வகையில் திட்டங்களை செயல்படுத்த தமிழ் வளர்ச்சித்துறைக்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என்றார்.
“கீழடியின் கொடை குறைவதில்லை. சமீபத்தில் கீழடியில் வெள்ளியிலான முத்திரை காசு கிடைத்தது. 2-ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த காசு 146 சென்டி மீட்டர் ஆழத்தில் கிடைக்க பெற்றுள்ளது.

இதன் மூலம் பழந்தமிழரின் வணிகத் தொடர்பும், அப்போது நாணய பரிமாற்றம் நடைபெற்றதற்கான சான்றாகவும் இது உள்ளது” என்று தன் ட்வீட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.