
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பியவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, ஒரு சமுதாயத்தைக் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக அமைச்சர் தரப்புக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், போலி மின்னஞ்சல் அனுப்பியவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய அபிராமபுரம் போலீஸார் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடியிருக்கின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “நிதியமைச்சர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 153 (ஏ) மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், 295 (ஏ) ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல், 465 பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், 467 – மதிப்புமிக்க பாதுகாப்பு, உயில் போன்றவற்றை போலி ஆவணங்கள் தயாரித்தல், 500 – அவதூறு பரப்புதல், 34 – உட்கருத்துடன் செய்யப்படும் செயல்கள், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். எந்த ஐபி அட்ரஸிலிருந்து மெயில் அனுப்பப்பட்டது என்ற விவரத்தை சைபர் க்ரைம் போலீஸார் சேகரித்துவருகின்றனர். குற்றவாளிகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/finance-minister-ptr-palanivel-complaint-against-fake-email