
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு பயணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. முன்பதிவு இல்லாமல் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் தொற்று பரவலால் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், நிறுத்தப்பட்ட முன்பதிவு இல்லாத ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து ஆக., 30ம் தேதி முதல் 5 முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து ஆக.,30ம் தேதி காலை 6.25 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் காலை 10.45 மணிக்கு காரைக்கால் செல்லும். மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதே நாளில் இரவு 7.15 மணிக்கு திருச்சி சென்றடையும்.

மயிலாடுதுறையில் இருந்து தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 6.45 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அதேநாள் காலை 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும். மறுமார்க்கமாக திருவாரூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதேநாளில் இரவு 9.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.
மதுரையில் இருந்து 30ம் தேதி முதல் காலை 7.10 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத ரயில் அதேநாள் காலை 10.35 மணிக்கு செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 7.10 மணிக்கு மதுரை செல்லும்.
இதேபோல, எர்ணாகுளம்- கொல்லம், கன்னூர்- மங்களூர் இடையேயான முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் 30ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831018