
மைசூரு : கர்நாடகாவின் மைசூரில் எம்.பி.ஏ., மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீஸ் படை கேரளா விரைந்துள்ளது.
மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்து கொண்டிருந்த, 23 வயது மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன், கடந்த 24 இரவில் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசி கொண்டிருந்தார்.அப்போது ஆறு பேர் அடங்கிய கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தடுக்க முயன்ற ஆண் நண்பரும் தாக்கப்பட்டார்.
இருவரும் மைசூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மாநிலம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பகிரங்கமாக துாக்கிலிடும்படி மாநிலத்தின் பல பகுதிகளில் மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உருட்டு கட்டையால் அடி
மாணவியின் ஆண் நண்பர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியதாக போலீசார் கூறியதாவது:நடை பயிற்சிக்காக மாலையில், மலை அடிவாரத்திற்கு அந்த மாணவியுடன் சென்றேன். அப்போது ஆறு பேர் அடங்கிய கும்பல் கற்கள், உருட்டு கட்டைகளால் என்னை தாக்கினர்.
மாணவியையும் தாக்கி, ஒருவர் பின் மற்றொருவராக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை மொபைல் போனில் வீடியோ பதிவும் செய்தனர்.பின், என் தந்தைக்கு போன் செய்து ‘ஆன்லைன்’ வாயிலாக 3 லட்சம் ரூபாய் அனுப்பும்படி மிரட்டல் விடுத்தனர். தந்தை ஒப்புகொள்ளாததால் என்னை அதிகமாக தாக்கினர்.நாங்கள் மயக்கமடைந்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எங்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு ஆண் நண்பர் போலீசிடம் கூறியுள்ளார்.
குற்றம் நடந்த பகுதியில் உள்ள மொபைல் நெட்வொர்க் மூலம் கொடூர குற்றத்தை செய்தவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் நான்கு பேர் பொறியியல் மாணவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மொபைல் நெட்வொர்க் தகவல்படி, சம்பவம் நடந்த மறுநாள், அந்த நான்கு மாணவர்களுக்கு தேர்வு இருந்துள்ளது. எனினும், அவர்கள் தேர்வுக்கு ஆஜராகவில்லை.
![]() |
கேரளா தப்பியோட்டம்?
அவர்கள் தங்கிய அறைகளையும் காலி செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். கல்லுாரியில் விசாரித்த போது, அவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் நெட்வொர்க் தகவல்படி அவர்களை பிடிக்க போலீசார் கேரளா சென்றுள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2832045