
வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீட்டு வருகின்றன. ஆப்கானியர்களும் தங்கள் சொந்தநாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், காபூல் விமான நிலையம் அருகே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவால் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள், 60 ஆப்கானியர்கள் என மொத்தம் 73 பேர் உயிரிழந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காபூல் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காபூல் குண்டுவெடிப்பு சம்பவம் நடக்க ஒருபோதும் அனுமதித்திருக்ககூடாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தை பைடன் நிர்வாகம் கையாள்வதையும் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.