
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் 3-வது அலை பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தனியார் இணையதள நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சிறாா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில், சிறாா்களிடையே தொற்று பரவமால் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ளலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி தொடா்பான கூடுதல் தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பின் நிபுணா்கள் குழு கோரியுள்ளது. அதன் காரணமாகவே அத்தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாத மத்திக்குள் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.