
வாஷிங்டன்: அமெரிக்காவில் அவசர கால அனுமதி பெற்றிருந்த பைசர் தடுப்பூசிக்கு முழு ஒப்புதலை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் வழங்கி உள்ளது.
அமெரிக்காவில் கோவிட் வைரசுக்கு எதிராக மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழக அவசரகால அனுமதியை வழங்கியது. அதேபோல் பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனி பயோன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த 3 தடுப்பூசிகளும் அமெரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா முழு ஒப்புதலை வழங்கி இருக்கிறது. இதுவரை அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற்றிருந்த பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் முழுமையான அனுமதியை வழங்கி இருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கூறுகையில், ‘பைசர் தடுப்பூசியை முழுமையாக அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்கா தான். தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்க இந்த முடிவு உதவும். பைசர் தடுப்பூசிக்கு முழு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையடுத்து அதன் உற்பத்தி அதிகரிக்கும்’ என்றார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2829738