
மகளை காதலித்த இளைஞர் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகாரும் கொடுத்துள்ளனர்.
மகளின் காதலரை வீடு தேடி சென்று அரிவாளால் வெட்டிய பெற்றோர்கள் திருவாரூர் அருகே பரபரப்பு..
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது மகன் முகம்மது பெமினாஸ் (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். மகளின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். தனது மகளை காதலிக்க கூடாது என முகம்மது பெமினாஸிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். அதனையும் மீறி முகம்மது பெமினாஸ் அந்தப்பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி தீபா இருவரும் இருசக்கர வாகனத்தில் முகம்மது பெமினாஸ் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளனர். அங்கு முகம்மது பெமினாஸ் மற்றும் அவரது பெற்றோர்களிடம் எங்களுடைய பெண்ணிடம் உங்கள் மகன் பழக வேண்டாம், நாங்கள் எங்கள் பெண்ணிற்கு வேறு ஒரு நபரை திருமணம் செய்ய உள்ளோம் என கூறியுள்ளனர். அதனை ஏற்காமல் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வேன் என முகம்மது பெமினாஸ் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த விஜயகுமார் மற்றும் தீபா கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முகம்மது பெமினாஸின் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த முகம்மது பெமினாஸை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகம்மது பெமினாஸின் உறவினர்கள் அடியக்கமங்கலத்தில் விஜயகுமார் வைத்துள்ள மருந்தகத்தை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதற்கிடையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதுங்கியிருந்த கௌசல்யாவின் தந்தை விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி தீபாவவும் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் விஜயகுமார் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பெமினாஸ் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெமினாஸ் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மகளை காதலித்த இளைஞரை வீடு தேடிச் சென்று தாயும், தந்தையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி தீபாவையும் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/tiruvarur-district-love-issue-parents-try-to-murder-daughter-boyfriend-hrp-520237.html