
புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்த அமளிக்கு மத்தியில் மத்திய அரசு முக்கிய மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:முறையான விவாதங்கள் இல்லாமல் பார்லிமென்டில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தம் அளிக்கிறது.

போதுமான விவாதங்கள் இல்லாததால் சட்டங்களின் உள்நோக்கங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. போதுமான விவாதங்கள் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளி இருக்கிறது. ஏன் இத்தகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2823751