
அரண்மனையின் உட்புறங்களில் பெய்யக்கூடிய மழைநீரும், அரண்மனையின் உள்ளே அமைந்திருந்த குளங்கள், கிணறுகள் இவற்றில் இருந்து வெளியேறக்கூடிய மிகை நீரும் அகழியில் சென்று சேருவதற்காக நிலத்தடியில் அமைந்திருந்த வழித்தடமே இந்த நீர்வழித் தூம்பு ஆகும்.
வரலாற்றுப் புகழ்பெற்ற தஞ்சாவூர் நகரத்தில் நான்கு பக்கமும் மன்னர்காலத்தில் அகழிகள் வெட்டப்பட்டன. இவை தஞ்சை பெரியகோயில் மற்றும் அரண்மனையை உள்ளடக்கிய பாதுகாப்பு அரணாகவும், மழைநீர் சேகரிப்பு மையங்களாகவும் திகழ்ந்தன. இவற்றில் தெற்கு அலங்கம் பகுதியில் வெட்டப்பட்டிருந்த அகழி காலப்போக்கில் கட்டடங்களாக மாறிப் போயின. ஆனால் இன்றைக்கும் மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் பகுதிகளில் அகழிகளைக் காணலாம்.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இங்குள்ள அகழிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ அலங்கம் பகுதியில் உள்ள அகழியில், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதரும் வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் மற்றும் சுவடியியல் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தூம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரண்மனை உட்புறங்களில் பெய்யக்கூடிய மழைநீரும், அரண்மனையின் உள்ளே அமைந்திருந்த குளங்கள், கிணறுகள் இவற்றில் இருந்து வெளியேறக்கூடிய உபரி தண்ணீரும், அகழியை வந்தடைவதற்காக, நிலத்துக்கு அடியில் பல அடி ஆழத்தில் இந்த நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வரலாற்று ஆய்வாளர் மணிமாறன், ‘’தஞ்சை பல நூற்றாண்டு வரலாறு கொண்டது. பல்லவர், முத்தரையர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராத்தியர் போன்ற மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு பின் ஆங்கிலேய ஆட்சியின் ஆளுகையின் கீழிருந்து பின்பு தமிழக மாவட்டங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. தஞ்சை நகரம் கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி, தெற்குவீதி என நான்கு வீதிகளும் அதன் புறம்படியாக கீழ அலங்கம், மேல அலங்கம், தெற்கு அலங்கம், வடக்கு அலங்கம் என்று இருக்கக்கூடிய பகுதியை ஒட்டியவாறு நான்கு புறமும் நீர் அரணாக மிகப்பெரும் அகழி உள்ளது. இந்த அகழி மன்னர்கள் காலத்தில் வெட்டப்பெற்று நீரால் சூழப்பட்டு நகருக்குள் அமைந்துள்ள அரண்மனையின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது.
பல நூற்றாண்டுகள் உயிர்ப்புடன் திகழ்ந்த அகழி காலப்போக்கில் ஆங்காங்கே தூர்க்கப்பெற்று பல கட்டடங்கள் எழுந்தன. இருப்பினும் மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் அகழியானது ஓரளவிற்கு இருந்து வருகிறது. இந்த அகழியின் உட்புறச்சுவர்கள் ஒரு சில இடங்களில் பழைய கட்டுமானத்துடன் காணப்படுகின்றன.

அன்றைய காலகட்டத்தில்… அகழி மற்றும் அகழியையொட்டிய கோட்டையானது, காவல் கோபுரங்களுடன் திகழ்ந்தது. இன்று தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள அகழியின் கோட்டை மேல் காணப்படும் காவல் கோபுரங்கள் மட்டுமே நல்ல நிலையில் காணப்படுகின்றன. மேல அலங்கம், கீழ அலங்கம், வடக்கு அலங்கம் பகுதிகளில் கோட்டை மீது குடியிருப்பு பகுதிகளாக மாறிய நிலையில் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகழி தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது.
தஞ்சை கொடிமரத்து மூலையை ஒட்டிய பகுதியில் அகழியின் கரை சுவற்றிற்கு இடையே நீர்வழிப்பாதை அமைந்துள்ளதை கண்டறிந்தோம். இந்த நீர்வழிப்பாதை குறித்து ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய் அதாவது பெருங்குளங்கள் என்றழைக்கப்படும் ஏரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அரண்மனை உட்புறங்களில் பெய்யக்கூடிய மழைநீரும், அரண்மனையின் உள்ளே அமைந்திருந்த குளங்கள், கிணறுகள் இவற்றில் இருந்து வெளியேறக்கூடிய மிகை நீரும் அகழியில் சென்று சேருவதற்காக நிலத்தடியில் அமைந்திருந்த வழித்தடமே இந்த நீர்வழித் தூம்பு ஆகும். நான்கு புறமும் செம்புறாங்கற்கள் கொண்டு சதுரவடிவில் முக்கால் அடி அளவில் இந்த நீர்வழிப்பாதை கட்டப் பெற்றுள்ளது. பழந்தமிழகத்தில் நீர் மேலாண்மையில் தமிழர்கள் சிறந்து விளங்கியமைக்கு இதுபோன்ற கட்டுமானங்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்’’ எனத் தெரிவித்தார்.