
லண்டன்: கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உடல் சோர்வு, மூச்சு திணறல், தசை வலி, இருமல், மூட்டு வலி, நெஞ்சுவலி, வாசனை உணராமை, வயிற்றுப்போக்கு, சுவையின்மை ஆகியவை அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
இந்த அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ராயல் சொசைட்டி ஆப் மெடிசின்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதில், குறிப்பிட்ட 5க்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் கோவிட் தொற்றுக்கு ஒருவர் ஆளாகிறபோது, அவர் மாதக்கணக்கில் தொற்றினால் மோசமாக அவதிப்பட நேரிடும் என தெரிய வந்துள்ளது.

அறிகுறிகள் என்ன?
குறிப்பாக உடல் சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல், இருமல், நாசி நெரிசல் ஆகியவற்றுடன் சுவாச கோளாறு இருந்தால் நீண்ட காலம் கோவிட் பாதிப்பு இருக்கும் என, தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், தொற்றால் 8 வாரங்களுக்கு மேலாக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804032